Thursday, December 27, 2007

அத்தியாயம் - 2 வணக்கத்துக்குரிய காதலி!

என்னடா இவனும் காதல்னு ஆரம்பிச்சுட்டான் அப்படின்னு நினைக்காதீங்க வாசகர்களே! இந்த உலகத்துல காதல் பத்தி பேசாத ஆளே கிடையாது. நாம சுவாசிக்கிற காற்றும் இந்த காதலும் ஒன்றுதான். உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ சுவாசிக்கணும். அப்போதான் வாழ முடியும். இன்னிக்கு யாராவது உங்ககிட்ட "எனக்கு காதலே வராது" அப்படினு சொன்னா ஒன்னு அவனுக்கு பைத்தியமா இருக்கலாம் இல்ல அவன் உயிர் வாழற ஒரு ஜடம்னு வெச்சுக்கலாம். எனவே அவங்க மேல கொஞ்சம் அன்பு காட்டுங்க. சீக்கிரம் அவங்களுக்கு காதல் வரணும்னு வேண்டிக்கோங்க. உலகத்துல இருக்கிற எல்லா ஜீவன்களுக்கும் பொருந்துற ஒரு விஷயம் காதல். ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு வரைமுறை வெச்சுருக்கும் இப்படி தான் காதலிக்கனும்னு. அப்படிதான் மனிதனுக்கும் அவன் காதலில் ஒரு வரைமுறை இருக்கு. உடனே என்னை கேக்காதீங்க என்னடா வரைமுறைனு. நான் வேணும்னா திருத்தி சொல்றேன் "ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் காதலில் ஒரு வரைமுறை இருக்கு". அவனே வகுக்கும் வரைமுறை. தேவைப்பட்டால் என்ன திருத்தம் வேணும்னாலும் செஞ்சுக்கலாம். இப்படி காதல் என்கிற பாடம் ஒவ்வொரு விதமாய் இருக்க எனக்கு தெரிஞ்ச ஒரு காதலை பத்தி இன்னிக்கு சொல்லலாமே அப்படின்னு தான் இப்படி ஒரு தலைப்பை வெச்சேன். "வணக்கத்துக்குரிய காதலி" - நிச்சயமாய் இவள் என் காதலி அல்ல. ஆனால் எந்த ஒரு காதலர்களையும் பார்த்தவுடன் இவளை ஞாபகம் செய்து கொள்வேன். உண்மையில் நான் காதலிக்க வேண்டும் என்கிற தாக்கம் இவளை பார்த்து தான் இல்லை இல்லை இவளை பற்றி கேட்டு தான் வந்தது. எனக்கு இவள் பெயர் தெரியாது, இவளை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இவள் காதலன் எனக்கு ஒரு வகையில் உறவினன். நல்ல அழகாய் இருப்பான். சொந்தமாய் தொழில் ஒன்று செய்து கொண்டிருந்தான். இவர்கள் காதலிக்கும்பொழுது இவர்களை பற்றி நான் கேள்வி படவே இல்லை... ஆனால் எல்லாம் முடிந்த பிறகுதான் தெரியும்... ஏதோ பெற்றோர் உற்றார் எதிர்ப்பு இருவர் தரப்பிலும். சற்று போராடி பார்த்திருக்கலாம். பையன் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டான். விஷம் குடித்து உயிர் நீத்தான். அவன் இறப்பை கேள்விப்பட்ட அந்த பெண் என்ன செய்தாள் தெரியுமா காதலன் இறந்த மூன்றாம் நாள் அவளும் உயிர் நீத்தாள். ஸ்தம்பித்து போனேன். பாராட்டுகிறேன் அவளை! உடனே என்னை தவறாக நினைக்காதீர்கள் இவன் தற்கொலையை வரவேற்கிறான் என்று. அப்படி இல்லை. சற்று சிந்தித்து பாருங்கள் இன்று எந்த பெண் தன் காதலனுக்காக இப்படி செய்கிறாள் என்று. என் பார்வையில் அந்த பெண் செய்ததை அவள் காதல் மேல் வைத்திருக்கும் மதிப்பு என்பேன். சிலர் இதை தவறென்று சொல்லலாம். காதலுக்காக சாவதா? இது ஒரு வணக்கத்துக்குரிய செயலா என வினா எழுப்பலாம். ஆனால் அவளுக்கு அந்த காதல் பெரியது, வணக்கதுகுரியது. இல்லையெனில் அவள் உயிர் விட்டிருக்க மாட்டாள் இல்லையா? இன்று எந்த ஒரு காதலர்களை பார்த்தாலும் நான் உதாரணமாய் சொல்வது இவள் காதலை தான். அதாவது இவள் மன உறுதியை தான். இவள் மன உறுதி இன்றுள்ள காதலர்களுக்கு கொஞ்சம் இருந்தாலும் போதும் அவர்கள் காதல் ஜெயமே.

பெண்ணே உன் காதலை இன்றும் ஒரு ரசிகனாய் ரசிக்கிறேன். நான் பார்க்கும் ஒவ்வோர் காதலிலும் உன் காதல் வாழும். ஏனெனில் என் காதலின் தாக்கமும் நீதான், என் காதலின் பார்வையும் நீதான், எனவே நான் ஒவ்வோர் காதலையும் உன் காதலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது உன் காதல் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.


---- மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.-----

Thursday, December 20, 2007

அத்தியாயம் -1 அன்னையும் பிதாவும்

என் இதயம் மிக சிறியது. சிலர் சொல்வார்கள் என் மனம் கல்லையும் மலையையும் போன்றது என்று. பொய். சுத்த பொய். அது ஒரு நரம்பு. மூளையில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ அணுக்களின் கூட்டமைப்பு. ஆனால் அது வடிவமைக்கும் உலகம், அதன் கற்பனை சக்தி கணக்கில் அடங்கா. அப்படி எனக்குள்ளும் ஒரு உலகத்தை நான் வடிவமைக்க காரணமான என் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களே. என் அன்னை ஒரு போராளி. உலகத்தில் தன் குழந்தையை பெற்று வளர்க்கும் ஒவ்வோர் பெண்ணும் போராளியே. என்னையும் என் அக்கா தங்கை தம்பி தங்கையை வளர்க்க அவர்கள் பட்ட பாடு...அப்பப்பா... இன்றும் எங்களை பற்றி யோசிக்கிறார். என்னை எத்தனையோ பேர் சொல்கிறார்கள் நான் பொறுப்பானவன் என்று. உண்மை அதுவல்ல. என் அன்னை அப்படி எல்லோரும் சொல்லும்படி என்னை மாற்றியிருக்கிறாள். என் தந்தை... இன்று என்னோடு இல்லை ஆயினும் பல விஷயங்கள் நடக்கையில் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். என்னையும் மீறி சில விஷயங்கள் நான் செய்கிறேன் என்றால் நான் அவர் ஆசிர்வாதங்களை வரமாய் பெற்றிருக்கிறேன் என்று நம்ப முடிகிறது. அப்படி ஒரு ரசிகரை, எல்லாவற்றையும் ரசிக்கும் ரசிகரை நான் இதுவரை கண்டதில்லை. என் தந்தையின் மேல் உள்ள பாசத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனின்... ம்ம்ம்ம்... ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்...Gold winner Sunflower oil.. My Daddy Strongest... இதை கேட்க என்தந்தை இல்லை என்றாலும் இதை சொல்ல இன்னும் நான் இருக்கிறேன் என்பதில் சற்று ஆறுதல் தான். இந்த வலை பூவையும், இனி தொடுக்கும் பல பூக்களையும் என் அன்னைக்கும் பிதாவிற்கும் சமர்ப்பணம் செய்கிறேன். முடிக்கும் முன்....அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

முன்னுரை

என் நண்பரை கேட்டேன் வலை பூ ஒன்று பின்ன வேண்டும் என்று. ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இந்த வலை பக்கத்தில் பதிவு செய் என்று வழி சொன்னார் அவருக்கு நன்றி சொல்லி இந்த வலையில் சில பூக்களை தொடுக்க ஆரம்பிகிறேன்.

இந்த வலைப்பூவில் பெரிதும் இடம்பெறும் விஷயங்கள் நான் சந்தித்த மனிதர்கள், என்னை பாதித்த சம்பவங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இன்னும் சில...