வணக்கம் வாசகர்களே! இந்த முறை தலைப்பு சாதாரணமானது தான். ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தில் முதல் முதலாக செய்த விஷயங்கள் எல்லாம் பல திருப்பு முனையாக அமையும். சில சப்பென்று இருக்கும். அப்படி பெரிதாக பாதிக்காத சில ஹாஸ்யமான சம்பவங்களையே இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.
முதல் பள்ளித்தோழி - பெயர் ஞாபகம் இல்லை. நான் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பில் அழும்போது என்னுடன் சேர்ந்து அழுதாள். சின்ன வயதில்லையா! அவளை பார்த்தவுடன் என் தங்கை ஞாபகம் வந்தது. என் தங்கையை தான் என்னுடன் சேர்த்து இருக்கிறார்கள் என்று முடிவே கட்டிகொண்டேன். அவ்வளவுதான் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் ஒரு சின்ன சந்தோஷத்துடன் புன்னகை தரும். ஆனால் அந்த நட்பு ஒருநாள் நட்பு தான். பிறகு அந்த பெண்ணை பார்த்தாகவோ பேசியதாகவோ எனக்கு நினைவில்லை.
முதல் தோழன் - ஹரி. அந்த நாளில் இவனை மாதிரி ஒரு "பொய் சொல்லி" இந்த உலகத்தில் பிறந்திருகவே முடியாது. அதே போல் என்னை போல் ஏமாளியும் இருக்கவே முடியாது. முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். அவன் என்ன சொன்னாலும் நம்பி விடுவேன். ஒரு முறை ஏதோ பேசிக்கொண்டிருந்த போது (விஷயம் நினைவில்லை) அவன் தந்தை "வீரப்பனை பிடிக்க சென்ற காவற்படையில் ஒருவர்" என்றான். அவன் தந்தை அப்போது தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு கடைநிலை ஊழியர் என்று தெரிந்தும் நான் அவன் சொன்ன பொய்யை நம்பினேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் நான் எவ்வளவு பெரிய ஏமாளி என்று.
முதல் வெற்றி - நான் L.K.G படிக்கும்போது முதல் மதிப்பெண் எடுத்தேன். எத்தனையோ வெற்றிகள் கிடைத்தாலும் கூட அந்த வெற்றி மறக்க முடியாத முதல் வெற்றி தான்.
முதல் தோல்வி - மூன்றாம் வகுப்பில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தேன். அரயாண்டிலும் நான் தான் முதல் மதிப்பெண் என்று பெருமை அடித்து தோல்வி அடைந்தேன். ஏனெனில் நான் ஏழாவது மதிப்பெண் வாங்கினேன். எனவே அகம்பாவம் என்பது என்ன என்ற பாடத்தை சொல்லிகொடுத்த முதல் தோல்வி என்பேன்.
முதல் ஆசை - என்னுடைய ஆறாவது வயதில் என் தந்தையிடம் ஒரு மூன்று சக்கர சைக்கிள் ஒன்று கேட்டேன். என் தந்தையும் சம்மதித்தார். யாரோ ஒருவர் சொன்ன தகவலின் பேரில் ஒரு இடத்திற்கு சென்றோம் சைக்கிள் வாங்க. அந்த கடைக்காரர் சொன்ன விலை கட்டுபடியகமல் திரும்ப வரவேண்டியதாயிற்று. அதனால் எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய முதல் ஆசை நிராசை தான்.
முதல் பயணம் - இதுவும் L.K.G படிக்கும்போது நடந்ததுதான். வைதீஸ்வரன்கோவில் சென்றோம் நானும் என் அன்னையும்.
முதல் பயம் - சின்ன வயதில் ஒருமுறை சென்னை வந்திருந்தேன். அப்பா அம்மாவோடு தான். எதையோ எடுத்து விளையாடி கொண்டிருந்தேன். என்னவென்று அப்போது தெரியாது. திடீரென்று என் மாமா உள்ளே நுழைந்து கதவை தாள் போட்டு என்னை அடிப்பதாக பயமுறுத்தினார். கட்டிலை சுற்றி ஓட வேண்டியதாயிற்று. இனி இந்த பொருளை தொட்டயோ தொலைந்தாய் என்று எச்சரிக்கை வேறு. அது வேறொன்றுமில்லை சீட்டு கட்டு. உபயோகம் செய்யும் முறை கூட தெரியாது. ஆனால் பயமுருத்தபட்டேன்.
முதல் திரைப்படம் - நான் பார்த்த முதல் திரைப்படம் கமல் இரட்டை வேடங்களில் நடித்த "அபூர்வ சகோதரர்கள்".
முதல் தண்டனை - எதற்கோ பொய் சொன்னேன் என்று என் அன்னை சாமி படங்களுக்கு முன்னால் தோப்பு கரணம் போட சொன்னார். அதுதான் எனக்கு கிடைத்த முதல் தண்டனை.
முதல் குறும்பு - ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பாடி கொண்டிருந்தேன். அந்த பக்கமாய் போன பள்ளி தலைமை ஆசிரியர் என்னை அழைத்து வர சொன்னார். "பாடு அந்த பாடலை இன்னொரு முறை என்றார்" " மாமா உன் பொண்ண கொடு என்றேன்" "படவா!" என்று செல்லமாய் அடிக்க வந்தார். ஒரே ஓட்டம் தான். தப்பித்து விட்டேன்.
மேலே சொன்ன அனைத்து முதல் விஷயங்களும் உண்மையே. ஆனால் இதுவெல்லாம் என் நினைவு தெரிந்து நடந்த முதல் விஷயங்கள். என் சிறு வயதில் இன்னும் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் நடந்திருக்கின்றன. வரும் அத்தியாயங்களில் அவசியம் வரும்போதெல்லாம் சொல்லுகிறேன்.
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment