Tuesday, April 8, 2008

அத்தியாயம் - 4. 24, வாய்க்காங்கரை தெரு.

சென்னை கோயம்பேட்டில் பஸ் ஏறி டிக்கெட் வாங்கி அமர்ந்தபோது இனம் புரியாத மகிழ்ச்சி என்னுள். நீண்ட நாள் கழித்து நண்பனை கண்டால் அடையப்போகும் ஆனந்தம். ஆம் நான் என் ஊருக்கு செல்கிறேன். நாங்கள் வசித்த வீட்டை பார்க்க போகிறேன். எங்கள் தெரு பெயர் "வாய்க்காங்கரை தெரு" எங்கள் ஊரில் அநேக இடங்களை தொட்டு கொண்டு ஓடும் அகேழுமலையாறு என்ற அந்த சிறிய கால்வாயின் கரையோரம் அமைந்த தெரு என்பதால் அது வாய்க்காங்கரை தெரு ஆயிற்று. அங்கே 24 ம் எண் வீட்டில் வாடகைக்கு குடியேறிய போது என் வயது 7. ஏறக்குறைய 12 வருடங்கள் அங்கே அந்த வீட்டில் தான் வசித்தோம். தெருவில் அநேகர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். சில செட்டியார், முஸ்லீம், கிறித்துவ மக்களும் வசித்து வந்தார்கள். எங்கள் தமிழ் உச்சரிப்பு சற்று மாறுபடும். தூய தமிழ் ஆங்காங்கே உறவாடும். சரி இனி என் வீட்டை பற்றி சொல்கிறேன். என் வீட்டில் வெளிக்கதவு கம்பிபோட்ட மரக்கதவு. வெளியில் இருந்து பார்த்தால் கொல்லை தெரியும். ஆனால் கொல்லைக்கும் வீட்டின் ஆரம்பத்துக்கும் ரொம்ப தூரம். சாதாரணமாக நான், மது, ஆனந்த், ராதா அண்ணா எல்லோரும் இடைப்பட்ட தூரத்தை வெகுவாக உபயோக படுத்தியுள்ளோம். கிரிக்கெட் விளையாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது இப்படியெல்லாம்... வெளிக்கதவின் மேலே மூன்று காலிங் பெல் இருக்கும். இதிலிருந்தே உள்ளே மூன்று வீடுகள் என்று யூகித்திருப்பீர்கள்.

வீட்டின் ஆரம்பத்தில் ஒரு திண்ணை இருக்கும். நானும் மதுவும் அங்கு அமர்ந்துதான் பேசுவோம். மது என் பால்ய சிநேகிதன். நாங்கள் இருவரும் திண்ணையில் அமர்ந்து வெகுநேரம் பேசுவோம். எங்கள் பாடத்தை பற்றி ஆரம்பித்து எங்கள் அறிவுக்கு எட்டிய எல்லா விஷயங்களையும் பேசுவோம். இப்போதெல்லாம் சொல்கிறீர்களே knowledge transition, எங்களுக்குள் அது அடிக்கடி நடக்கும். திண்ணையை தாண்டினால் பத்தாயம், நெல் கொட்டும் இடம். கிட்டத்தட்ட 5 அடி இருக்கும். சிலமுறை இறங்கி பார்த்திருக்கிறேன். கும்மிருட்டு என்பார்களே அப்படி இருக்கும். பத்தாயம் தாண்டினால் வலதுபுறம் ஒரு பெரிய்ய ஒற்றை மரக்கதவு இருக்கும். உள்ளே சென்றால் ஒரு பெரிய தாழ்வாரம் நான்கு அறைகள் இருக்கும். அதில் இரண்டு சமையலறைகள். இரண்டு படுக்கை அறைகள். ஒரு சமையலறையும் படுக்கையறையும் எங்களுக்கு. இன்னொன்றை owner மாமாவும் மாமியும் உபயோக படுத்தி கொண்டார்கள். மற்றபடி பார்த்தால் ஒரே குடும்பம் போல்தான்.

தாழ்வாரத்தின் நடுவே பெரிய ஊஞ்சல் கட்டியிருந்தோம். வீடு பெரிய ஒட்டு வீடு. நடு நடுவே மீடியம் சைஸ் தூண்கள் இருக்கும். வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் தூண்களை பார்க்கலாம். ஏறக்குறைய 15 தூண்கள் இருக்கும். இந்த பக்கம் தூண்கள் அந்த பக்கம் சாமி படங்கள் நடுவே ஊஞ்சல் சீ-சா ஆடும்போது எழும் சுகம் இருக்கிறதே!!! அடடா..! அதிலும் ஊஞ்சல் அதன் உயரத்தை தாண்டும்போது கீழே பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா! அது என்னமோ ஒரு சிலருக்கு பைக் ஓட்டுவது போல், கிரிக்கெட் ஆடுவது போல் எனக்கு ஊஞ்சல் ஆடுவதில் சந்தோஷம். சமையல்அறை வழியாக ஒரு கதவு உண்டு. அதன் வழியில் வந்தால் நீங்கள் மூன்றாவது வீட்டின் ரேழியை பார்க்கலாம். மூன்றாவது வீடு மாடி வீடு. அடுக்கு மாடி இல்லை. வீடு மேலே மொட்டை மாடி அவ்வளவுதான். மாடிப்படிகட்டுகளில் ஏறும்போது மட்டும் நான் விமானம் ஏறுவதாக நினைப்பேன். மாடியின் வளைவில் நின்று என்னை கலபதி என்று நினைத்துக்கொள்வேன். அந்த படிகளில் அமர்ந்துதான் காபி குடிப்பேன். மாடி வீட்டை தாண்டி கிணற்று கரை. கிணறு நிச்சயம் ஆழமானது. ஆனால் தண்ணீர் சில அடிகளிலேயே தெரியும். மழை கலாம் என்றால் இன்னும் ஜோர். ரொம்ப வாளியை கீழே இறக்க வேண்டாம். என் குளியல் வைபவம் அங்கே தான் பெரும்பாலும். வீட்டின் முன்புறம் அதாவது ஒற்றை கதவுக்கு சற்று தள்ளிய வெட்டவெளியில் ஒரு பைப்படி உண்டு. கிணற்றாங்கரைக்கு எதிரே குளியலறை உண்டு ஆனாலும் எனக்கு கரையில் குளிப்பதுதான் மகிழ்ச்சி.

அதை தாண்டி பெரிய கொல்லை வாய்க்கால் வரை நீண்டிருக்கும். கொல்லைக்கும் போனால் அங்கே ஒரு அற்புதமான தோட்டம் உங்களை வரவேற்கும். சாமந்தி பூச்செடி, ராமர் பூச்செடி, நெல்லிக்காய் மரம், தென்னை மரம், நார்த்தங்காய் மரம், வாழை மரம், மனத்தக்காளி செடி என்று ஒரு பெரிய காடே தெரியும். கொல்லையின் கடைசியில் மூங்கில் மரங்களும் அடர்த்தியாய் இருக்கும். சில கீரிகளும், பாம்புகளும் பார்த்திருக்கிறேன். நிறைய முறை கொல்லையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன். மண்வெட்டியால் கொத்தி பல செடிகளை நட்டிருக்கிறேன். அந்த வீடு எனக்கு ஒரு விளையாட்டு திடலாக, பாடசாலையாக, ஒரு முக்கியமான உறவாக இருந்தது. owner மாமா அதை விற்ற பிறகு, நாங்களும் சென்னை வந்துவிட்டோம். இத்தனை நாள் கழித்து இப்போதுதான் நான் வாழ்ந்த வீட்டை பார்க்க செல்கிறேன். ஊர் வந்ததும் நேரே மது வீட்டுக்கு போனேன். அங்கே போய் குளித்து உடை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். ஒரு மகிழ்ச்சியுடன் கால் வைத்தேன் என் தெருவில். அதே பிள்ளையார் கோவில், வனத்துறை அலுவலகம், பெட்டிக்கடை, ச.மூ.இ பள்ளி சுவர் பெயிண்ட் கூட மாறாமல், மகாலிங்கர் அய்யர் வீடு எல்லாம் சரியாக அப்படியே இருந்தது. ஆனால் நான் இருந்த வீடு மட்டும் சுத்தமாக இடித்து புதியதாய் கட்டியிருந்தது. முன் வீடு, பின் வீடு, கிணறு, கொல்லை ம்ம்ம்...ஹும்... எதையும் காணோம். நீ தேடிவந்த வீடு இதுதான் என்ற அடையாளத்திற்கு மட்டும் மாடிப்படிகள் சாட்சி சொல்லின. மற்றவை எல்லாம் அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்தது. முன் வீடு பங்களாவாக காட்சி அளித்தது.

என் மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத வேதனையும் வெறுமையும் குடி கொண்டது. என் நண்பன் ஒருவன் என்னை கூட்டிப்போக வந்தான். சைக்கிளில் ஏறி வீட்டை கடந்தபோது என் வாழ்வின் முக்கியமான ஒரு அடையாளம் என்னிடமிருந்து அழிக்கப்பட்டதாக தோன்றியது. மீண்டும் சென்னை வந்து என் அலுவல்களை பார்க்க ஆரம்பித்தேன். எதேச்சையாய் சுஜாதா அவர்களின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படிக்க நேர்ந்தது. அதன் தாக்கம் தான் இந்த அத்தியாயம். ஏதோ ஒரு பாரத்தை பகிர்ந்து தூக்குவதாக எண்ணிக்கொண்டு தற்சமயம் விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.

2 comments:

Murali said...

பால்யத்தை பகிர்ந்து கொள்வதென்பது
நம்மையே பகிர்ந்து கொள்வது போலத்தான். அந்த வகையில் இது ஒரு நல்ல முயற்சி. ஒரு சூழலை காட்சிபடுத்துவது என்பது ஆகச்சிறந்த எழுத்தாளர்களுக்கே சாத்தியம். அதில் தோற்றுப்போகும்போது உணர்வுகளை எழுப்புவதற்குப் பதிலாக வெறும் செய்தியாக மட்டுமே எஞ்சும். இந்த விஷயத்தில் இன்னும் கவனம் தேவை என எண்ணுகிறேன். வணிகமயமாதல் மற்றும் நகரமயமாதலின் பிரதான இலக்கு நம் பால்யத்தின் வேர்களை அழித்தல் தான். மேலும் எழுத வாழ்த்துக்கள்.

நட்புடன்,
முரளி

Thozhan said...

நன்றி. உங்கள் கருத்துக்களை சிரமேற்க்கொண்டு இனி வரும் அத்தியாயங்களில் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நன்றிகளுடன்
தோழன்.