இராத்திரி ஒரு 10 மணி இருக்கும்...ஒரே புழுக்கம், கரண்ட் வேற இல்ல. என்ன பன்றது? மாடிக்கு போய் படுத்துக்கலாம் அப்டின்னு நினைச்சு என் தம்பி பயலையும் கூட்டிட்டு போனேன் (தனியா படுத்துக்க பயம் ஹி ஹி...)
நல்ல செமையான காத்து... நிலா வெளிச்சம் அடேங்கப்பா... அப்டியே மேல பார்த்துகிட்டே என் தம்பிகிட்ட சொன்னேன்..
"டேய் சுப்பு! அதோ தெரியுது பார் பிரகாசமா ஒரு நட்சத்திரம் அதுதான் வீனஸ்! வைரம் மாதிரி இல்ல!"
"ஆமாமாம்! நல்லா பார்த்துக்கோ... இன்னும் 3000 வருஷம் கழிச்சு வீனஸ் கிரகமே இருக்காது!" அப்டின்னான்.
"3000 வருஷம் கழிச்சு நானே இருக்க மாட்டேன்... அது சரி என்ன உளர்றே... வீனஸ் எப்டி 3000 வருஷத்துல அழியும்?"
"உளறலே! 3000 வருஷத்துக்கு அப்புறம் சூரியன் ஒளி சுத்தமா போய்டும். உள்ள இருக்கிற தணல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து சூரியனோட சைஸ் பெருசாகும். அப்போ முதல்ல மெர்குரி சூரியன் உள்ள போய்டும். அப்புறம் வீனஸ்."
"அப்போ பூமி?"
"அதுவும் தான்... ஆனா சூரியன் அணையும் போதே இந்த உலகத்துல நிறைய ஜீவராசி இருக்காது. மொத்தத்துல சோலார் பேமீலியே இருட்டாகிடும்..."
இன்னும் என்னவோ சொல்லிகிட்டே போனான்.. எனக்கு ஒண்ணும் புரியல. பயம் ரொம்ப வந்துடுச்சு... அச்சோ கடவுளே!!!
"டேய் சுப்பு நீ கடவுள நம்புறியா?"
"அது வேற இது வேற... கடவுள் என்னோட நம்பிக்கை! இது விஞ்ஞானம்!"
ஹ்ம்ம்ம்ம்.... ஒண்ணும் விளங்கல..சரின்னு படுத்துட்டேன்... குழப்பம் மட்டும் போகல...
மறுநாள் ராத்திரி 12 மணி...மாமாவும் நானும் தெருவுல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். மறுபடி அதே கேள்வி.
"மாம்ஸ் சுப்பு நேத்திக்கு இப்படியெல்லாம் சொல்றான்!!! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!"
"ஏன் உன் தம்பிக்கு இருக்கிற தெளிவு உனக்கு இல்ல?"
"அப்போ அவன் சொல்றதெல்லாம் நம்ப சொல்றியா?"
"அது விஞ்ஞான பூர்வமான செய்திதானே... அப்போ நம்பித்தான் ஆகணும்"
"இதோ பாரு மாம்ஸ் அவன் சொல்றத நம்பினா கடவுள் இல்லேன்னு ஆகிடும்... என்னால கடவுள் இல்லேன்னு நினைச்சு கூட பார்க்க முடியல!"
"உண்மை அதுதானே டா.."
"எது?"
"கடவுள் இல்லேன்றது..."
"அது உன்னோட கொள்கை... அதை என்கிட்டே திணிக்காத..."
"அதை திணிச்சாலும் ஏத்துக்க முடியாது உன்னால... நீ உணர்ந்தா தான் உண்டு.."
"அப்டி தான் கடவுளும்... நீயா உணர்ந்ததாதான்... சரியான கம்யூனிஸ்ட்...!"
"கடவுள் அப்டின்றது உன் மனதின் மாயத்தோற்றம்... நீ எதாவது செஞ்சே அப்டினா அது சரியா தப்பானு பார்க்க உனக்கு ஒரு judge தேவை. அந்த illusion தான் கடவுள்"
"இதுதான் உன்னோட கொள்கையா?"
"இல்ல... கருத்து... எடுத்துக்கிறது உன் இஷ்டம்..."
ரொம்ப லேட் ஆகிடுச்சு. அதனால தூங்க போய்ட்டேன். கேள்வி மட்டும் இன்னும் உறுத்திகிட்டே இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு என் சொந்த ஊர் போயிருந்தேன்... தங்க தேர் இழுக்க குடும்பமா கிளம்பினோம்... வழக்கம் போல மது வீட்ல தான் டேரா...மதுவையும் கூப்பிட்டேன்...
"டேய் நீயும் வாடா! தேர் இழுக்கலாம்..."
"இல்ல நான் வரல"
"எனக்கு தெரியும் உனக்கு சாமி நம்பிக்கை இல்லேன்னு. ஆனா எனக்காக வா!"
"பாக்கறேன்..."
ராத்திரி எல்லாரும் வந்தாங்க... மதும்மா மதுப்பா..எல்லாரும்... இந்த பய மட்டும் வரல. எதிர்பார்த்தது தான்.
"மதுப்பா மது வரல?"
"எவ்ளோவோ சொன்னோம் வாடான்னு... கேட்டா தானே...சாமியே இல்லேங்கறான்...ஏதாவது விளக்கம் கொடுத்து எங்கள பேசவிடாம பன்றான்.. என்ன செய்யறது."
அவர சமாதான படுத்தனுமே! "மதுப்பா எனக்கு உங்களுக்கு...கடவுள் நம்பிக்கை தேவை. நமக்கு மேல ஒரு சக்தி இயங்கறதா நாம நம்பினாதான் நம்மால decision எடுக்க முடியும். நமக்கு மட்டுமில்ல பலபேருக்கு... அதனால தான் நாம நம்பற சக்திய கிருஷ்ணர், முருகர், ஜீசஸ், அல்லா, ஜீயஸ்... அப்டினெல்லாம் பாக்கிறோம். ஆனா மதுவுக்கு அவன் மாதிரி இருக்கிற சிலருக்கு அவங்க மேல இருக்கிற நம்பிக்கையே போதுமானது... அதனால தான் அவனுக்கு கடவுள் தேவை படல!"
"தேர் இழுக்க பேர் கொடுத்தவா கொஞ்சம் முன்னாடி வாங்கோ..."
"குருக்கள் கூப்பிடறார் மதுப்பா நான் போய் பார்த்துட்டு வரேன்... அப்புறம் சொல்லனும்னு தோன்றது... சொல்றேன்...நீங்க கவலை படாதீங்க! கடவுள் நம்பிக்கை மதுவுக்கு கண்டிப்பா வரும்! கடவுள் இருந்தா!"
அவர் என்ன ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருக்கும்போதே நான் ஆச்சர்யப்பட ஆரம்பிச்சேன்..."அடடா தங்க தேர்ல என்ன அலங்காரமா இருக்காரு முருகர்... முருகா எல்லோரையும் காப்பத்துப்பா..."
எல்லாத்தையும் மறந்துட்டு உற்சாகமா தேர் இழுக்க ஆரம்பிச்சேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment