"ஏய்! நீ இடது கையாலையும் எழுதுவியா?" ஆச்சரியமாய் கேட்டாள் அவள்.
"எப்பொழுதாவது..." புன்னகைத்தான்.
"என்ன எழுதுற...ம்ம்ம்... OUR GREATEST GLORY IS NOT IN NEVER FALLING BUT RISING EVERY TIME WE FALL. நல்லா இருக்குடா. எனக்கு இதுல உன் கையெழுத்து போட்டுக்கொடேன். ப்ளீஸ்..."
மறுப்பேதும் சொல்லாமல் போட்டு கொடுத்தான். திரும்ப ஒரு sticker பேப்பரை அவள் நீட்டினாள். அதில் பிள்ளையார் கார்ட்டூன் ஸ்டைலில் அழகாய் அமர்ந்திருந்தார்.
அதை வாங்கி ஷர்ட் பாக்கெட்டில் வைத்தபடி கேட்டான். "சரி உன் கம்ப்யூட்டர் பிரச்சினை என்ன ஆச்சு... "
"ஹ்ம்ம்..ஹ்ம்ம்... சரியாகலைடா. அப்டியே இருக்கு. உங்க டீம்ல கேட்டா கொஞ்சம் டைம் ஆகும்னு சொல்றாங்க. இங்க எனக்கு ஒரே பிரஷர்! என்ன பண்றதுன்னே தெரியல.."
"ம்ம்ம்...நான் செக் பண்றேன். சரி பண்ணி தந்தா என்ன தருவ?"
"என்ன வேணும்? "
"சாக்லேட்! "
"சரி... பண்ணல.... தொலஞ்ச நீனு.... "
சிரித்து கொண்டே கம்ப்யூட்டர் அருகில் சென்றான். என்ன சமரசம் செய்தானோ நமக்கு தெரியாது அது பவ்யமாய் அவள் எதிர்பார்த்த வேலையை செய்ய துவங்கியது.
"எப்படிடா…"
"அதெல்லாம் கேட்காதே dear...சாக்லேட்டை எடு!"
"கில்லாடிடா நீ... இந்தா 5star…"
வாங்கி கொண்டு வெளியே வந்தான். அவசர அவசரமாய் சாக்லேட்டை மென்றான்.
"டேய் மச்சி! என்ன தின்ற.."
"ஒண்ணுமில்லடா. ஒண்ணுமில்ல"
"டேய் அவன பிடி.. கைல என்ன சாக்லேட்..டேய் அது வெறும் பேப்பர்டா. நமக்கு கூட குடுக்காம தின்னுட்டாண்டா. மேல வா உன்ன என்ன பண்றேன் பாரு…"
"டேய் இல்லடா.. அது...." என்று சமாதனம் செய்ய பார்க்க...
"இத நம்ம Team leader கிட்ட சொல்றேன்.." என்று ஓடியவனை துரத்த......
"ஆபீஸ் நேரமாச்சு கிளம்பலையா" என்று அம்மாவின் குரல் கேட்டது. கலைந்து போன நினைவுகளுடன் (நிஜங்களுடன்???) பையை தூக்கி கொண்டு நடந்தான்.
"ஒரு வருசத்துக்குள்ள எவ்ளோ மாற்றம்...நம்ம வாழ்க்கையே மாறிடுச்சே...machine life...ச்சே..." வெறுத்துபோய் ஒரு கல்லை எட்டி உதைத்தான். ரயில்வே ஸ்டேஷன் வந்து மீண்டும் அதே நினைவுகள்.
ரயில் வந்து ஏறும் வரை உணர்வற்று இருந்தான். ஏறிய அந்த நொடி யாரோ பின்னே உரசிய உணர்வு. சரலேன்று கை பின் பாக்கெட்டுக்கு சென்றது. அய்யோ! பர்ஸ்... ரயில் நகர தொடங்கியது...
"சார்.. என் பர்ஸ் கீழ எங்கேயாவது விழுந்திருக்கா பாருங்களேன்... கருப்புகலர் சார்.. "
"இல்ல தம்பி...இங்க எதுவும் விழல... "
"வீட்ல வெச்சுட்டு வந்திருப்ப.. போன் பண்ணி பாருப்பா... "
"பிளட்பாரத்துலயே யாரவது அடிச்சிருப்பாங்க... "
ஆளாளுக்கு அவர்கள் கருத்தை சொன்னதோடு சரி... பர்ஸ் போய்விட்டது... கம்பார்ட்மென்ட்டில் இருந்த எல்லோரும் அவனுக்கு திருடர்கள் மாதிரி தெரிய.. இவன் எடுத்து வெச்சுகிட்டே நடிக்கிறானோ.. இவனா இருக்குமோ.. இவன்... ஹ்ம்ம்.ஹ்ம்ம்... யாரை பார்த்தும் தீர்மானிக்க முடியவில்லை... அடுத்த ஸ்டேஷன் இறங்கி ரயில்வே அதிகாரியிடம் போனான்.. அங்கிருந்து ரயில்வே போலிஸ் ஸ்டேஷன்...
"எங்க ஏரியாவில பர்ஸ் அடிக்க மாட்டாங்களே...நீங்க தான் எங்கேயாவது தவற விட்டிருபீங்க." கூட இருந்து பார்த்தது போல சொன்னார் அந்த கான்ஸ்டபிள்.
"இல்ல சார். எனக்கு என் பாக்கெட்லேர்ந்து யாரோ எடுத்த மாதிரி தான் இருந்தது."
"அப்போ ஒன்னு பண்ணுங்க. ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க... பர்ஸ் கிடைக்கறது கஷ்டம் ஆனா சர்டிபிகேட் கொடுக்கிறேன்... உங்களுக்கு பேங்க் கார்டு வாங்கறதுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்."
"சரி சார்... எழுதித்தரேன்."என்றான் சற்று உடைந்து போய்.
பர்ஸ் விபரம் எழுதும்போது சற்று நிதானமாய் எழுத ஆரம்பித்தான்.
1. SBI debit card
2. Credit card
3. driving license
அப்புறம்...மனம் ஒரு பக்கம் சொல்லிகொண்டே இருந்தது...எழுதுடா முட்டாளே.. ஒரு கார்ட்டூன் பிள்ளையார், சாக்லேட் பேப்பர்... ம்ம்ம்...
உந்திய மனதை அசட்டை செய்து விட்டு கம்ப்ளைன்ட் பேப்பரை கொடுத்தான்.
வெளியே வந்து அடுத்த ரயில் பிடிக்கும் போது மனம் கிட்டத்தட்ட அழுது புரள ஆரம்பித்தது... ஐயோ! உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல... கவனம் வேண்டாம். போச்சு எல்லாம் போச்சு.. முட்டாள்..."
அன்று சொன்ன அதே சமாதானத்தை இன்றும் சொன்னான் "விடுடா.. கிடைக்கவா போகுது... போகனும்னு இருக்கு... போய்டுச்சு..."
அன்று போலவே இன்றும் மனம் கேட்காமல் அவனை திட்டி கொண்டும் அழுது கொண்டும் இருந்தது.
அவன் ஜன்னலை வெறிக்க ஆரம்பித்தான் வழக்கம்போல் ஒரு இயந்திரமாய்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment